Published : 03 Apr 2014 12:28 PM
Last Updated : 03 Apr 2014 12:28 PM
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க மாநகராட்சி புதிய கழிப்பறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் குறிப்பாக பள்ளிகள், மருத்துவமனைகள், மின்மாற்றிகள், கம்பங்களுக்கு அருகில் சிறுநீர் கழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் பல சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன.
இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் முறையாக சென்னை ராயப்பேட்டை பகுதியில் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் அருகில் இந்த கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான இந்த சிறுநீர் கழிப்பிடங்களை இருவர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். கழிப்பிடத்தின் மேல் 300 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட சிண்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதே இந்த கழிப்பிடங்களின் நோக்கம். இதில் லாரி மூலம் தினமும் தண்ணீர் நிரப்பப்படும். வாய்ப்பு இருக்கும் இடங்களில் அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து தண்ணீர் இணைப்பு பெறப்படும். இந்த கழிப்பிடங்கள் கழிவுநீர் கால்வாய்களோடு இணைக்கப்படும். மின் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தேனாம்பேட்டையில் 36 இடங்களில் வைக்கப்படும் இந்த இலவச கழிவறைகள் சென்னையின் மற்ற இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியோடு இணைந்து பொது கழிப்பிடங்கள் அமைக்கும் திட்டங்களில் வேலை பார்க்கும் டிரான்ஸ்ப்ரண்ட் சென்னை அமைப்பை சேர்ந்த சத்யரூபா சேகர் கூறுகையில், " சென்னையில் ஆயிரத்துக்கும் குறைவான கழிப்பறைகள்தான் உள்ளன.
நமக்கு இதை விட ஐந்து மடங்கு அதிக கழிப்பறைகள் தேவை. சென்னை முழுவதிலும் கழிப்பறை அமைக்க வேண்டிய இடங்களை மாநகராட்சி கண்டெடுக்க நாங்கள் உதவியுள்ளோம். தேர்தல் முடிந்த பிறகு மற்ற கழிப்பறை திட்டங்களும் செயல்படுத்தப்படும்," என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT