Published : 26 Jun 2018 09:54 AM
Last Updated : 26 Jun 2018 09:54 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் அரிசி மூட்டைக்குள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலை

எழும்பூர் ரயில் நிலையத்தில் அரிசி மூட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீட்கப்பட்டது. இதை கடத்தி வந்தது யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தின் 2-வது நுழைவாயில் அருகே ஆட்டோ நிறுத்தம் உள்ளது. அதன் அருகே நேற்று காலை நீண்ட நேரமாக 25 கிலோ அரிசி மூட்டை ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதை அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம் கவனித்தார். சக ஆட்டோ ஓட்டுநர்களான விஜய் மற்றும் மணிகண்டன் உதவியுடன் அந்த மூட்டையை பிரித்து பார்த்தார்.

அந்த அரிசி மூட்டைக்குள் ஒரு அடி உயரம் உள்ள நடராஜர் சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த சிலையை எழும்பூர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார். ரயில்வே போலீஸார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு சிலை மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்க வேல் சம்பவ இடம் விரைந்தார். சிலையை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் செல்வத்துக்கு ரூ.2 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சிலையை அரிசி மூட்டைக்குள் வைத்து கடத்தி வந்தவர் யார், எங்கிருந்து யாருக்காக கடத்தி கொண்டு வரப்பட்டது என்று பல்வேறு கோணங்களில் எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x