Published : 21 Jun 2018 11:18 AM
Last Updated : 21 Jun 2018 11:18 AM
தமிழக உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,558 கோடி நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்களை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார். நிதியமைச்சர் பியூஷ் கோயலிடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால்தான் 14-வது மத்திய நிதி ஆணையத்தின் அடிப்படை மானியத்தின் 2-வது தவணையை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட சிக்கல்களால் தேர்தலை நடத்த முடியவில்லை. அதே நேரத்தில் சிக்கல்கள் தீர்ந்தபின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.172 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
எனவே, 2-ம் தவணையாக தமிழக உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,390 கோடி, செயலாக்க மானியம் ரூ.560 கோடி, 2018-19 நிதியாண்டில் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ.1,608 கோடி என மொத்தம் ரூ.3,558 கோடியை மத்திய நிதித் துறை அமைச்சகம் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பரசோத்தம் ரூபாலாவிடம் அளித்த மனுவில், ‘மத்திய அரசின் மானியம் உரிய நேரத்தில் கிடைக்காததால், ஊரக உள்ளாட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அரசு நிர்வாகம் சிரமத்துக்குள்ளாகி உள்ளது. எனவே, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவை மானியத்தை உடனடியாக விடுவிக்க மத்திய நிதித் துறைக்கு பரிந்துரைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடமும் அமைச்சர் வேலுமணி மனு அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT