Published : 21 Jun 2018 11:16 AM
Last Updated : 21 Jun 2018 11:16 AM

ரூ.80 கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி

காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள் கடந்த 2015-ம் ஆண்டில் காணாமல்போயின. இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர் திருட்டு

இதேபோல, கடந்த 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசி அருகே உள்ள சவுந்தரியபுரத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டன. மேலும், வந்தவாசி அருகே பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் இருந்து வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் திருடு போயின. இவை தொடர்பாக வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்குகளில் 16 பேர் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சென்னை புழல் காவாங்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற குமார் (40) அப்போது தப்பிவிட்டார்.

இந்த 3 வழக்குகள் தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

ஆட்டோவில் சென்றபோது ஆய்வு

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் ஆகியோர் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் சந்தேகப்படும் வகை யில் சென்ற தனலிங்கம் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஏற் கெனவே திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான 8 சுவாமி சிலைகள் இருந்தன. அச்சிலைகளை பறிமுதல் செய்ததுடன், தனலிங்கத்தை தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, புழல் காவாங்கரையைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர் சிலைகளை கோயிலில் இருந்து திருடி விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து டிஎஸ்பி சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, விநாயகமூர்த்தி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரைக் கொண்ட தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஜெய்குமாரைத் தேடி வந்தனர். இந் நிலையில் காவாங்கரையில் நேற்று அவரை கைது செய்தனர்.

பின்னர், கும்பகோணம் நீதிமன்றத் தில் ஜெயக்குமாரை நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஜூலை 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தும், அதுவரை ஜெயக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x