Published : 21 Jun 2018 09:31 AM
Last Updated : 21 Jun 2018 09:31 AM
பெற்றோரிடம் இருந்து 4 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கவனிக்காமல் கைவிட்ட மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு, மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்க பழநி சார் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெற்றோர்களிடம் இருந்த சொத்துகளை பறித்துக்கொண்டு, அவர்கள் கவனிக்காமல் கைவிடும் மகன்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வருகின்றன. இது போன்ற புகார்களுக்கு ஆளாவோர் மீது தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி, பாப்பாத்தி தம்பதியின் மகன் ஆறுமுகசாமி என்பவர், தனது பெற்றோரிடம் இருந்து 4 ஏக்கர் விவசாய நிலத்தை பெற்றுக்கொண்டு வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல் தவிக்கவிட்டுள்ளார். இதுகுறித்து சார் ஆட்சியர் அருண்ராஜிடம் ராமசாமி புகார் தெரிவித்தார்.
நிலப்பதிவு ரத்து
அருண்ராஜ் மேற்கொண்ட விசாரணையில், சொத்துகளை வாங்கிக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் ஆறுமுகசாமி கைவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகசாமிக்கு பெற்றோர் எழுதிக்கொடுத்த 4 ஏக்கர் நிலப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியர், அந்த நிலத்தை மீண்டும் ராமசாமியிடம் ஒப்படைத்தார்.
இதேபோல், பழநி அருகே அய்யம்புள்ளி கிராமத்தில் பழனியம்மாள் என்பவரின் 3 மகன்கள் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு தாயாரை பாதுகாக்காமல் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மாதம் ரூ.6 ஆயிரம் தாயாரின் வங்கிக்கணக்கில் செலுத்த சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT