Published : 31 May 2018 12:55 PM
Last Updated : 31 May 2018 12:55 PM

சர்ச்சைப்பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு

சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்த நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படலாம் என்பதால் ரஜினி வீட்டுமுன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று 1996 முதல் கூறிவந்த நிலையில் கடந்த ஜனவரி 31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இதுவரை கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் வெளியிடவில்லை.

கட்சியின் மாநில நிர்வாகியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய ராஜு மகாலிங்கம் என்பவரை நியமித்தார். ரசிகர்களை மட்டுமே சந்தித்தும், ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டும் வந்த ரஜினி தனது ரசிகர்கள் யாருக்கும் பதிலளிக்க கூடாது நேரடியாக தேர்தல் நேரத்தில் களம் இறங்குவதாக அறிவித்தார்.

தனது கொள்கை குறித்து கேட்டபோது ஆன்மிக அரசியல் என்றார். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற பெயரை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஒவ்வொரு தடவையும் அரசியல் அழுத்தம் வரும்போது மட்டும் கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் மாற்றிக்கொள்வதும் ரஜினியை சர்ச்சையில் சிக்க வைத்தது.

ஐபிஎல் போராட்டத்தில் ஆரம்பத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்தவர், பின்னர் பின் வாங்கி போராட்டக்காரர்களை கண்டித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த ரஜினி, அனைவரும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நேரத்தில் தான் போகாமல் இருந்தால் அது சரியல்ல என்ற எண்ணத்தில் தூத்துக்குடி சென்றார்.

அங்கும் போராட்டம் குறித்த ரஜினியின் விமர்சனமும், அரசுக்கு ஆதரவாக பேசியது, இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரிய ட்ரெண்டானது. இந்நிலையில் ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஏய் என ஏக வசனத்தில் பேசினார். காலா பட ரிலீஸுக்காகத்தான் மக்களை சந்திக்க வெளியே வந்தார் என்ற விமர்சனமும் வந்தது.

காலா படத்தில் போராட வேண்டும் என காட்சிகளை வைத்துவிட்டு நிஜ வாழ்க்கையில் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஜினி வீட்டின் முன் போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற தகவல் அடிப்படையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x