Published : 22 May 2018 11:51 AM
Last Updated : 22 May 2018 11:51 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டம்: போலீஸார் தடியடி - மோதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடத்தூரிலிருந்து பேரணியாக புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, மற்றொரு போராட்டக் குழுவினர் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது,  பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில், போலீஸ் வாகனத்தை பொதுமக்கள் சேதப்படுத்தியதாகவும், காவல் துறையினர்  மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x