Published : 22 May 2018 09:25 AM
Last Updated : 22 May 2018 09:25 AM

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் குறைவு; காலதாமதத்தால் பயணிகள் தவிப்பு

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், பயணச் சீட்டு வழங்கும் கவுன்ட்டர்கள் குறைவாக உள்ளதால், பயணிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். நெரிசல் நேரமான காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 10 மணிவரையிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணச் சீட்டு வழங்கும் கவுன்ட்டர்கள் கூடுதலாக்கப்படவில்லை. இதனால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பயணச் சீட்டு வாங்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, “செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு வாங்க வரிசையில் அரைமணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு குறைவான கவுன்ட்டர்கள் மட்டுமே உள்ளன. மேலும் விரைவு ரயில் முன்பதிவு மையம், மின்சார ரயில் பயணச்சீட்டு மையம் ஆகிய இரண்டையும் ரயில்வே நிர்வாகம் ஒன்றாகச் சேர்த்து பயணச் சீட்டு வழங்குவதால் காலதாமதம் ஏற்படுகிறது. முன்பு போலவே தனித் தனியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே நிலைய மேலாளரிடம் கேட்டபோது, “பயணிகள் நெரிசல் இருப்பது உண்மைதான். அதிக அளவில் பயணிகள் நிற்கும் அளவுக்கு பயணச் சீட்டு வழங்கும் இடம் முன்பு வசதியாக இருந்தது. நிர்வாகக் காரணங்களால், ரயில் முன்பதிவு கட்டிடத்துக்கு இது மாற்றப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயணிகள் நிற்க முடியும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சாலையில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பிராந்திய அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x