Last Updated : 20 May, 2018 03:53 PM

 

Published : 20 May 2018 03:53 PM
Last Updated : 20 May 2018 03:53 PM

கர்நாடக முதல்வர் பதவி: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா- நாராயணசாமி பதில்

கர்நாடக சட்டப்பேர்வை தேர்தலில் 38 இடங்களைப் பெற்ற மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது பற்றி கேட்டதற்கு, 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதிலளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

"கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாமல் பணம் மற்றும் அதிகார பலத்தால் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதள சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி தவிடு பொடியாகிவிட்டது. இதன் மூலம் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இனி வரும் காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிகாரங்கள் இல்லாத ஆளுநர்களை கொண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவின் முயற்சிகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட கர்நாடக மாநில ஆளுநர் அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்''/

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

கர்நாடகாவில் அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, " இது அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவு. அதற்கு என்ன செய்ய முடியும். காங்கிரஸ் கொடுக்கின்றது, மதச் சார்பற்ற தளம் பெற்றுக்கொள்கிறது. பிஹாரில்கூட அதிக இடம் பெற்ற லல்லு, நிதீஷ்குமாரிடம் முதல்வர் பதவியைக் கொடுத்தாரே, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'' என்று கூறிவிட்டு நாராயணசாமி சிரித்தார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x