Published : 17 May 2018 12:41 PM
Last Updated : 17 May 2018 12:41 PM

எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பு; அவல நாடகத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது: திருமாவளவன்

கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதன் மூலம், தன் கண் முன்னால் நடைபெறும் அவல நாடகத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஆட்சி அமைப்பதற்குப் போதுமான பலம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் எடியூரப்பாவை முதல்வராகப் பதவி ஏற்கச் செய்ததன் மூலம் கர்நாடாகாவில் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆட்சி அமைப்பதற்கு 112 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். அந்தக் கூட்டணியின் தலைவராக எச்.டி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலையும் கடிதங்களையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார். ஆட்சி அமைப்பதற்கு அவரைத்தான் ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்; மாறாக எடியூரப்பாவை ஆளுநர் முதல்வராக்கி இருக்கிறார். இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான குற்றமாகும்.

இந்தப் பிரச்சினையை அவசர வழக்காக ஏற்று இன்று அதிகாலை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அந்த அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் அளித்த உச்ச நீதிமன்றத்தை நாம் பாராட்டுகிறோம். சுமார் மூன்று மணிநேரம் பொறுமையாக நீதிபதிகள் வாதங்களை கவனித்துள்ளனர். அதற்காக நன்றி சொல்கிறோம். ஆனால், எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அது அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பதவி ஏற்பு நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருந்தாலும் தன் கண் முன்னால் அரங்கேற்றப்படும் ஒரு அவல நாடகத்தை நீதிமன்றம் தடுக்கத் தவறிவிட்டது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறோம். இதே நிலை 2019 பொதுத்தேர்தலின் போதும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறோம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்எல்ஏக்களை பாஜகவின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல் பாதுகாப்பது அந்தக் கட்சிகளின் பொறுப்பு மட்டுமல்ல, கர்நாடக மக்களின் கடமையும்கூட. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விசாரணையிலாவது நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கவேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x