Published : 17 May 2018 11:11 AM
Last Updated : 17 May 2018 11:11 AM

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரிபேட் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்குக: வாசன்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரிபேட் நிலுவைத்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள 1,136 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 3.30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய ரிபேட் நிலுவைத்தொகை ரூ.380 கோடியாகும்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகத்தில் உள்ள சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட 88 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டும் சுமார் 19 கோடி ரூபாயை ரிபேட் நிலுவைத்தொகையாக வழங்க வேண்டியுள்ளது. பரமக்குடி சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை நம்பி சுமார் 15 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத்தொழில் மற்றும் அதனைச் சார்ந்த உப தொழிலும் செய்து வருகிறார்கள்.

எனவே கைத்தறி நெசவாளர்களின் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரம் சிரமப்படாமல் தொடரவும் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ரிபேட் தொகையை அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஏற்கெனவே மத்திய அரசின் உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கைத்தறிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு பருத்தி நூல் மற்றும் பட்டு ரகங்கள் - செயற்கைப்பட்டு ரகங்கள் விலை ஏற்றம் பெற்று கைத்தறி தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே மத்திய அரசு கைத்தறி தொழிலை காப்பாற்ற ஜிஎஸ்டி வரியிலிருந்து கைத்தறிக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 88 கோடி ரூபாய் சந்தை ஊக்குவிப்பு நிதியாக வழங்க வேண்டிய நிலையில் தற்சமயம் 30 லட்சம் விற்பனை செய்த சங்கங்களுக்கு மட்டுமே இந்நிதி வழங்கப்படும் என புதிய விதியை உருவாக்கியுள்ளது. இதனால் கைத்தறி நெசவுத்தொழில் நசிந்து போகக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு சந்தை ஊக்குவிப்பு நிதி தொடர்பான புதிய விதிகளை தளர்வு செய்து கடந்த காலங்களைப் போல் விற்பனை விலக்கு இல்லாமல் சந்தை ஊக்குவிப்பு நிதியை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும், சந்தை ஊக்குவிப்பு நிதி தொடர்பான புதிய விதிகளை தளர்வு செய்யவும், நடவடிக்கை எடுத்து கைத்தறி நெசவுத்தொழிலை காப்பாற்றவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் முன்வர வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x