Published : 17 May 2018 07:26 AM
Last Updated : 17 May 2018 07:26 AM
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஏமன் கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். அதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதே நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி கரூர் மாவட்டம் மாயனூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, திருத்தணியில் 102.38, வேலூரில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT