Published : 11 May 2018 10:37 AM
Last Updated : 11 May 2018 10:37 AM

பெரம்பலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த கார் மீது மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

பெரம்பலூர் அருகே மது போதையில் டிரைவர் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி எதிரில் வந்த கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் கோடை விடுமுறையில் குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குப் போக முடிவு செய்தார். நேற்று மதியம் தனது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டார். டவேரா வாடகை காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் அந்த கார் பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.

திருச்சியிலிருந்து கடலூர் மாவட்டம் பென்னாடம் நோக்கி தனியார் கார் சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சக்தி சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றார். கார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார் எதிரே சின்ன காஞ்சிபுரத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி டவேரா காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டவேரா கார் உருத்தெரியாமல் நொறுங்கியது. இந்த விபத்தில் டவேரா காரில் பயணித்த மோகன் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய தனியார் கார் ஓட்டுநர் சக்தி சரவணன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்கு காரணமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x