Published : 11 May 2018 08:01 AM
Last Updated : 11 May 2018 08:01 AM

குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து தாக்குதல்; மூதாட்டி கொலை வழக்கில் 23 பேர் கைது

போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் மூதாட்டி உயிரிழந்தார். இதுதொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை என்ற இடத்தில், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வழி கேட்டு காரில் வந்தவர்களை, குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து கிராம மக்கள் நேற்று முன்தினம் தாக்கினர். இதில் சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி (65) என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அவருடன் வந்த வெங்கடேசன் (54), கார் ஓட்டுநர் கஜேந்திரன் (44) மற்றும் மலேசியாவில் இருந்து வந்த மோகன்குமார் (43), சந்திரசேகரன் (55) ஆகியோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் களியம், அத்திமூர், கணேசபுரம், திண்டிவனம், தம்புகொட்டான்பாறை மற்றும் காமாட்சிபுரம் உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால், அந்த கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதுகுறித்து போளூர் காவல் துறையினர் கொலை, கொலை முயற்சி உட்பட 8 பிரிவுகளின் கீழ் 67 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில், தம்புகொட்டான்பாறை கிராமத்தைச் சேர்ந்த சிவா உள்ளிட்ட 23 பேரை நேற்று கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x