Published : 09 May 2018 09:50 AM
Last Updated : 09 May 2018 09:50 AM

ஆவடி அருகே 4 பேர் கொண்ட கும்பல் கைவரிசை; போலீஸ் போல் நடித்து கொள்ளை: 27 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றது

ஆவடி அருகே காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து 27 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவர்த்தன நகரை சேர்ந்தவர் சங்கர்(73). இவருக்கு மனைவி, மகன்கள் ரமேஷ், பாபு, மகள் சித்ரா உள்ளனர். மகன்கள், மகள், மருமகன் ஆனந்தன் அனைவரும் கூட்டுக் குடும்பமாக கோவர்த்தன நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் சங்கரின் வீட்டுக்கு சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர், தாங்கள் காவல் துறையை சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள், “விபச்சார வழக்கில் சாந்தி என்பவர் சிக்கியுள்ளார். அவர், ஆனந்தன் என்ற பெயரை சொல்கிறார். எனவே, ஆனந்தன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சொத்துகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளனர்.

அதை உண்மை என நம்பிய சங்கர் குடும்பத்தார், வீட்டின் பீரோ சாவியை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் பீரோவை திறந்து, அதில் இருந்த 27 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, காரில் தப்பினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள ஆவடி போலீஸார், காவல் துறையினர் போல் நடித்து, நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x