Published : 05 May 2018 07:08 AM
Last Updated : 05 May 2018 07:08 AM

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ‘குழும வளர்ச்சி நிர்வாகிகள்’ கருத்தரங்கம்: பங்கேற்க மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், ‘குழும வளர்ச்சி நிர்வாகிகள்’ என்ற தலைப்பில் மே மாத இறுதியில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்புவோர் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சிறு, குறு தொழில் முனைவோருக்கும், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தொடர் கருத்தமர்வுகள், தொடர் பயிற்சி பட்டறைகள், அனுபவப் பகிர்வு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.

அதன்படி, ‘குழும வளர்ச்சி நிர்வாகிகள்’ என்ற தலைப்பில் 5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குழும வளர்ச்சி துறையில் நிபுணத்துவம் வாய்ந்த, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த கருத்தாளர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த கருத்தரங்கை இம்மாதம் கடைசி வாரத்தில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன பயிலரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பங்கேற்பாளர் கட்டணம், 70% மானியத்தொகை போக ரூ.5 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், மே 15-ம் தேதிக்குள், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன துணை இயக்குநர் வி.டி.ஆனந்தன் அவர்களை 8668102090 என்ற எண்ணில் தொடர்புகொண்டோ, ddcdp@editn.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x