Published : 02 May 2018 12:45 PM
Last Updated : 02 May 2018 12:45 PM

மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேதனை

மருத்துவம் படித்து சமூகத்திற்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவனின் உயிர், மதுவால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு காரணமாக, தற்கொலை செய்து கொண்டிருப்பது இதயத்தை காயப்படுத்துகிறது, இனியாவது மதுக்கடைகளை அரசு மூடவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்து கொள்ள முடியாமல், தினேஷ் என்ற மாணவர் நெல்லை வண்ணாரப்பேட்டை தொடர்வண்டிப் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை மாவட்டம் குருக்கள்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மீட்க முடியாத அளவுக்கு மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். இதனால் அவரது குடும்பம் சீரழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மாடசாமியின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தின் நிம்மதி, பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.

இதற்குக் காரணமான மதுப்பழக்கத்தை கைவிடும்படி மாடசாமியிடம், 12-ஆம் வகுப்பு முடித்து மருத்துவப் படிப்பு படிக்க ஆயத்தமாகி வரும் அவரது மகன் தினேஷ் மன்றாடியிருக்கிறார். ஆனால், அதை அவரது தந்தை பொருட்படுத்தாததால் மனம் உடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சமூகத்தையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு உயிர் மதுவின் தீமையால் பறிபோயிருக்கிறது.

மாணவன் தினேஷின் தற்கொலைக்கு அவரது தந்தை மாடசாமி மட்டும் காரணமல்ல; தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும் தான் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தினேஷின் சட்டைப்பையிலிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தான் தாம் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமது இறுதிச் சடங்கில் தந்தை மாடசாமி கலந்து கொள்ளக்கூடாது என்று மாணவர் தினேஷ் குறிப்பிட்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு பிறகாவது தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் மன்றாடியிருக்கிறார்.

மாணவர் தினேஷிடமிருந்து நீட் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டு கைப்பற்றப்பட்டிருக்கிறது. மருத்துவம் படித்து சமூகத்திற்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவனின் உயிர் மதுவால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது இதயத்தை காயப்படுத்துகிறது. மாணவனின் தற்கொலை மதுவுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலும் கூட, தற்கொலை போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சிக்கலுக்கும் தற்கொலை தீர்வல்ல.

உலகில் பிறந்த எந்தவொரு உயிருக்கும், தாய்க்கு அடுத்தபடியான உன்னதமான உறவு தந்தை தான். அத்தகைய தந்தை தமது இறுதிச்சடங்கில் பங்கேற்கக்கூடாது என்று தமது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு காயப்பட்டிருப்பார் என்பதை உணர முடியும். தமது மறைவுக்கு பிறகாவது மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த இளைஞர் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம் தமது குடும்பத்தைப் போன்று மற்ற குடும்பங்களும் சீரழிந்து விடக்கூடாது என்பது தான்.

தினேஷின் குடும்பத்தைப் போன்று தமிழகம் முழுவதும் தெருவுக்கு ஒரு குடும்பம், தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது. தினேஷைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் கவுரவம் கருதி, மதுவால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை வெளிப்படையாகக் கூற முடியாமல் மனதிற்குள் போட்டு புதைத்து, புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தான் உண்மை.

ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை. மக்களுக்கு மதுவைக் கொடுத்து சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்றுவது, வாழ்க்கையில் முன்னேறாமல் மது அருந்த ரூ.100 அல்லது ரூ.200 கிடைக்காதா? என்று ஏங்கும் நிலையிலேயே வைத்திருப்பது, அத்தகைய சூழலைப் பயன்படுத்தி ஓட்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200 கொடுத்து வாக்குகளை வாங்கி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது தான் இந்நாள் ஆட்சியாளர்களுக்கும், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் கொள்கையாக உள்ளது. தமிழகம் சந்திக்கும் அனைத்து சீரழிவுகளுக்கும் இது தான் காரணம் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி 6 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளை மூடியது. தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாத பினாமி அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறந்தது.

அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறைத்தும் நெடுஞ்சாலைகளில் 1300 மதுக்கடைகளை பினாமி அரசு திறந்தது. அதையும் எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தி புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசரம் அவசரமாக மேல்முறையீடு செய்துள்ளது. மதுக்கடைகளை மூடுவதில் காட்டிய ஆர்வத்தை காவிரிப் பிரச்சினையில் காட்டியிருந்தால் எப்போதோ அப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும்.

மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் முடிவுக்காக காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக்கொண்டிருக்காமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x