Published : 02 May 2018 07:43 AM
Last Updated : 02 May 2018 07:43 AM

18 அமைச்சர்கள் பதவியேற்பு: இலங்கை அமைச்சரவை 4-வது முறையாக மாற்றம்

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டணி ஆட்சியில் நேற்று 4-வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் 18 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் எஸ்எல்பிபி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 4-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவால் பிரதமர் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், வாக்கெடுப்பின்போது அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சுதந்திர கட்சியைச் சேர்ந்த 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர்.

அந்த 16 அமைச்சர்களும் ஏப்ரல் 11-ம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தனது கட்சி அமைச்சர்கள் மீது அதிபர் சிறிசேனா கட்டுப்பாட்டை இழந்து வருகிறார் என சுதந்திர கட்சியினர் நேரடியாக குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்று அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 18 கேபினட் அமைச்சர்கள், அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இலங்கை கூட்டணி ஆட்சியில் 4-வது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x