Published : 30 Apr 2018 09:42 AM
Last Updated : 30 Apr 2018 09:42 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறாமல் தடுப்பதற்காக மெரினாவில் நேற்று ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மற்றும் 15க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் சார்பில் சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மட்டுமின்றி மெரினாவிலும் ஆயிரக் கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மெரினா கடற்கரையில் நுழைந்து யாரும் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மெரினா கடற்கரை போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுற்றுலா பயணிகளும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். பைக், கார் உட்பட அனைத்து வகையான வாகனங்களும் மெரினா உட்புறச்சாலையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT