Published : 16 Apr 2018 09:09 PM
Last Updated : 16 Apr 2018 09:09 PM

நிர்மலா தேவி ஆடியோ விவகாரம்; ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையில் உயர் மட்ட விசாரணை: ஆளுநர் உத்தரவு

 கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொழிலுக்கு வலைவிரித்த கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற  ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

'ஆளுநருக்கு அடுத்த லெவலில் உள்ள முக்கியமான விஐபிக்களுக்கு தேவை, அதனால் தான் பேசுகிறேன். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்' என்று ஆசை காட்டிப் பேசுகிறார்.

ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசி உள்ளார் என்றெல்லாம் பேசி மிகப்பெரிய விஐபிக்கு தேவை. அவர் பெயரைச்சொன்னாலே நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்கிறார். இந்த ஆடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியே வந்தது. இது நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

பேராசிரியை கைது செய்யப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு எழுந்தது. கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து அருப்புக்கோட்டை போலீஸார் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சற்று முன் கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகை வரை செல்வாக்கு என்று பேசியதால் இந்த விவகாரத்தில் சந்தேகம் ஆளுநர் மாளிகை வரை நீண்டது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வேகமாகப் பரவி வரும் தேவாங்கர் கல்லூரி ஆடியோ விவகாரத்தில் காமராஜர் பல்கலைக்கழகமும் குறிப்பிடப்பட்ட ஆடியோ வெளியானது.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அறிக்கை அடிப்படையில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

1972-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.சந்தானம் ராமநாதபுர ஆட்சியர், நிதித்துறை செயலர், போக்குவரத்து, திட்டக்கமிஷன், வணிகவரித்துறை, ஆளுநரின் செயலர், சிஎம்டிஏ துணைத்தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

2004-ம் ஆண்டு வெள்ளம், 2005-ம் ஆண்டு சுனாமி பேரழிவு மீட்புப்பணியில் மிகச்சிறப்பாக செயல்பட்டதால் தேசிய மாநில அளவிலான ஊடகங்களால் பாராட்டப்பட்டவர். தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினராக உள்ளார். இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x