Published : 16 Apr 2018 07:46 PM
Last Updated : 16 Apr 2018 07:46 PM
கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு வலைவிரித்த கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் அதிகாரிகள் சென்றபோது நிர்மலா வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளிருந்தார். இதனால் போலீஸார் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்தனர்.
விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகாரில் பேராசிரியை கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பேராசிரியை பேசும் ஆடியோவில் 5 மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் செல்போனில் பேசும் பேராசிரியை ஐந்து பேருக்கும் ஆசை வார்த்தை கூறி, 'மதிப்பெண் மற்றும் பெரிய அளவில் பணம் கிடைக்கும். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்' என்று ஆசை காட்டிப் பேசுகிறார்.
ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசி உள்ளார் என்றெல்லாம் பேசி மிகப்பெரிய விஐபிக்கு தேவை. அவர் பெயரைச்சொன்னாலே நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்கிறார். இந்த ஆடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியே வந்தது. இது நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
நிர்மலா தேவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும். பின்னால் உள்ள பெரிய மனிதர்கள் யார் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது.
இதையடுத்து அருப்புக்கோட்டை போலீஸார் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் போலீஸார் பேராசிரியை நிர்மலா தேவியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றனர்.
போலீஸ் வரும் தகவலை அறிந்த நிர்மலா தேவி வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கிக்கொண்டார். போலீஸார் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அக்கம் பக்கத்தாரிடம் கேட்டபோது அவர் வீட்டில் தான் இருக்கிறார் என்று தெரிவித்தனர்.
இரண்டு ஏடிஎஸ்பிக்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் அவர் வீட்டைச் சுற்றி வளைத்தனர். ஆனாலும் நிர்மலா தேவி வெளியே வராததால் அருப்புக்கோட்டை வட்டாட்சியரிடம் போலீஸார் முறையிட்டதன் பேரில் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அவர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைக்க முடிவெடுக்கப்பட்டது. நிர்மலா தேவியின் உறவினர் வந்தபின்னர் அவர் முன்னிலையில் பூட்டு உடைக்க போலீஸார் முடிவெடுத்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
பின்னர் பேராசிரியை நிர்மலா தேவியின் கணவர் மற்றும் உறவினரை விசாரித்த போலீஸார் பின்னர் மாலை 6.55 மணி அளவில் அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அதிரடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நிர்மலா தேவியைக் கைது செய்து உடனடியாக ஜீப்பில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT