Published : 02 Apr 2018 06:53 PM
Last Updated : 02 Apr 2018 06:53 PM
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று டெல்லி செல்கிறார். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள போராட்டம், சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமரிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தெரிகிறது.
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. மாநில அரசும் இதோ அதோ என்று நாள் கடத்தியதில் 6 வார காலக்கெடு முடிந்தது. மத்திய அரசு கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு வினாக்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு, அரசியல் அழுத்தம் காரணமாக மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் கடுமையான போராட்டம் வெடித்தது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளொரு போராட்டம் அறிவித்துள்ளன. 5-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளன.
வரும் 15-ம் தேதி சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டவும் முடிவெடுத்துள்ளனர். போராட்டம் வலுத்து வருவதை ஒட்டி தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறைச்செயலாளரை அழைத்து ஆளுநர் புரோகித் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டம் ஒழுங்கு, அரசியல் ரீதியான எழுச்சி, பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டம் குறித்தும்பேசப்பட்டதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இது குறித்த விரிவான ஆலோசனை நடத்த ஆளுநர் புரோகித்தை பிரதமர் டெல்லி அழைத்துள்ளார்.
இன்று மாலை டெல்லி செல்லும் பன்வாரிலால் நாளை மாலை பிரதமரை சந்திக்கிறார். பிரதமரிடம் தமிழக சட்டமொழுங்கு, அரசியல் சூழல் குறித்த அறிக்கையை அளிப்பார் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT