Published : 30 Mar 2018 08:44 AM
Last Updated : 30 Mar 2018 08:44 AM
சென்னை-மதுரை இடையே ஒரு வழித்தடத்திலும், மதுரை-சென்னை இடையே மற்றொரு வழித்தடத்திலும் என இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை-மதுரை இடையே பயண நேரம் மேலும் குறையும்.
சென்னை - தென்மாவட்டங்கள் இடையே, இரு மார்க்கத்திலும் அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை ஒரே வழித்தடத்தில் இயக்கப்படுவதால், எதிரே வரும் ரயில்களுக்கு வழிவிட சில ரயில்கள் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிக போக்குவரத்து காரணமாக இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சென்னை-செங்கல்பட்டு இடையே ஏற்கெனவே 2-வது அகல ரயில் பாதை உள்ளது. இதையடுத்து, முதல்கட்டமாக செங்கல்பட்டு- விழுப்புரம், திண்டுக்கல்-மதுரை இடையே 2-வது ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
2-ம் கட்டமாக விழுப்புரம்- திண்டுக்கல் இடையே 281 கி.மீ. தூரம் 2-வது பாதை அமைக்கும் பணி 2011-ல் தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக 259 கி.மீ. தூரத்துக்கு 2-வது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டன.
இதில் திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி முதல் மணப்பாறை அருகே கல்பட்டிசத்திரம் வரை 22 கி.மீ. தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தியதில் சிக்கல் காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணப்பட்டு கடந்த 13, 14-ம் தேதிகளில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து 22 கி.மீ. தூரமுள்ள புதிய வழித்தடத்தில் ரயில்களை இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம், விழுப்புரம்-மதுரை இடையேயான 2-வது ரயில் பாதை பணி நிறைவடைந்து சென்னை-மதுரை இருவழித்தடங்களில் இன்றுமுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது சென்னை-மதுரை ரயில்கள் ஏற்கெனவே உள்ள பாதையிலும், மதுரை-சென்னை ரயில்கள் இரண்டாவது பாதையிலும் செல்லும். இதன் மூலம் எதிரே வரும் ரயில்களுக்கு வழிவிடக் காத்திருக்கத் தேவையில்லை. இதனால் பயண நேரம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குறைய வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT