Published : 21 Mar 2018 07:42 AM
Last Updated : 21 Mar 2018 07:42 AM
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, தனது கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோலில் நேற்று வெளியே வந்தார்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது கணவர் நடராஜன் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, சசிகலா, தனது வழக்கறிஞர் அசோகன் மூலமாக பரப்பன அக்ரஹாரா சிறையில் 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். நடராஜனின் இறப்புச் சான்றிதழ், உள்ளூர் பிரமுகரின் சிபாரிசு உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 3 நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. பரோல் ஆணை தயாராவதற்கான பணிகள் சற்று தாமதமானதால், சிறை அலுவலகத்திலேயே 5 மணி நேரமாக சசிகலா காத்திருந் தார்.
இதனைத் தொடர்ந்து, சசிகலாவிடம் பிற்பகல் 1 மணியளவில் சிறை அதிகாரிகள் பரோல் ஆணையை வழங்கினர். அதில், சசிகலா 15 நாட்களும் தஞ்சாவூரில் தங்கியிருக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, பத்திரிகையாளர்களை சந்திக்கவோ கூடாது. அரசியல் நிகழ்வுகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கக் கூடாது ஆகிய நிபந்தனைகள் பரோல் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி, சசிகலா, வரும் ஏப்ரல் 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் சிறைக்குச் சென்று கையெழுத்திட வேண்டும்.
பரோல் ஆணை கிடைக்கப்பெற்றதை அடுத்து, நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை, அவரது ஆதரவாளர் புகழேந்தி, ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கணக்கானோர் வரவேற்றனர்.
சோகம் நிறைந்த முகத்துடன் வெளியே வந்த அவரைப் பார்த்து, அவரது தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பினர். பின்னர், பரப்பன அக்ராஹாரா பகுதியில் இருந்து சாலை வழியாக தஞ்சாவூருக்கு சசிகலா காரில் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT