Published : 18 Mar 2018 08:20 AM
Last Updated : 18 Mar 2018 08:20 AM

மஹாராஷ்டிராவில் இருந்து வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை ரூ.12 ஆக வீழ்ச்சி: கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.10, அவரை ரூ.20-க்கு விற்பனை

மஹாராஷ்டிராவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்திருப்பதால், அதன் விலை ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய அளவில் பெரிய வெங்காயம் உற்பத்தியில் மஹாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், கர்நாடக மாநிலம் 2-ம் இடத்திலும் உள்ளது. பெரிய வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இதனால், தமிழகத்தின் பெரிய வெங்காயத் தேவைக்கு பிற மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் லாசல்கான் பகுதியில் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வழக்கமாக கோடைப் பருவத்தில் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பெரிய வெங்காயம் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. அதனால் அங்கு உற்பத்தி அதிகரித்து, கோயம்பேடு சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்திருப்பதால், இதுவரை கிலோ ரூ.45 ஆக இருந்த அதன் விலை, நேற்று கிலோ ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், தக்காளி கிலோ ரூ.10, சாம்பார் வெங்காயம் ரூ.25, கத்தரிக்காய் ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.16, அவரை ரூ.20, வெண்டைக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.8, பாகற்பாய் ரூ.15, பீன்ஸ் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.4, கேரட் ரூ.13, பீட்ரூட் ரூ.6 என விற்பனை செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x