Published : 27 Feb 2018 09:10 AM
Last Updated : 27 Feb 2018 09:10 AM

ஸ்ரீதேவி குடும்பத்துக்கு ஆறுதல் கூற செல்கிறேன்: கமல்ஹாசன் தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவே மும்பை செல்வதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நேற்று மதியம் மும்பை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பொதுவாக, இறுதி ஊர்வலங்களில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். தற்போது ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவே மும்பை செல்கிறேன்.

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி சின்னத்தில், மும்பை செம்பூர் தமிழர் பாசறை அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதைப் பார்த்து, அதுகுறித்து விளக்கம் அளிக்க அதன் நிர்வாகிகள் அந்தோணி ராஜ், ராஜேந்திர சாமி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அன்பின் காரணமாக, அவர்கள் பயன்படுத்திய லோகோவின் உரிமையை எங்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். வருங்காலத்தில் யாரும் விமர்சனமோ, சிக்கலோ ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இந்த பிரச்சினைக்கு அவர்களே தீர்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

கட்சி லோகோ, பெயரில் மாற்றம் செய்ய உள்ளதாக வரும் செய்திகள் தவறானவை. நெடுவாசல் போகும்போது அதுபற்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு கமல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x