Published : 24 Feb 2018 04:41 PM
Last Updated : 24 Feb 2018 04:41 PM

அரிதாரம் பூசி வண்ணமயமாய் பறக்கும் பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறும்: கமல், ரஜினி மீது ஓபிஎஸ் தாக்கு

அரசியலில் புதிதாக அரிதாரம் பூசி சில வண்ண பலூன்கள் பறக்கின்றன. விரைவில் அவை உடைந்து சிதறிவிடும் என துணை முதல்ர் ஓபிஎஸ், கமல்- ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவச்சிலையை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூட்டாக திறந்து வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது டிடிவி தினகரன், கமல், ரஜினியை விமர்சித்தார். டிடிவி தினகரனை விமர்சிப்பது வழக்கமான ஒன்று என்றாலும் கமல் ரஜினியை அதிமுக மேடையில் விமர்சித்திருப்பதன் மூலம் புதிய சர்ச்சையை ஓபிஎஸ் கிளப்பி உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது:

''இப்போது சிலர் மக்களை காப்பாற்றப் போகும் ரட்சகர்கள் தாங்கள் தான் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக அரசியல் அவதாரம் எடுத்திருக்கும் இவர்கள் பேசும் ஆரவார வசனங்கள் எல்லாம் வெறும் புஸ்வாணமாக மாறி ஆரவாரம் இல்லாமல் அடங்கி போய்விடும்.

நல்லவர்களைப் போல அவர்கள்போடும் வேஷம் வெகு விரைவில் கலைந்து போய் விடும், அவர்கள் குழுக்களும் கலகலத்துப் போய்விடும். ஏற்கெனவே தமிழகத்தில் நம்மை வெல்ல நினைத்த அரசியல் கட்சிகள் எல்லாமே, காற்று போன பலூன்களாய் சுருங்கிப்போய் கிடக்கின்றன.

அரசியல் வானில் புதிது புதிதாக சில காற்றடைத்த பலூன்கள் பறக்கத் தொடங்கி உள்ளன. அரிதாரம் பூசிய அந்த வண்ண பலூன்கள் பார்ப்பதற்கு அழகாய்த்தான் தெரியும். அந்த பலூன்கள் வெகு விரைவில் வெடித்துச் சிதறி ஒன்றுமில்லாமல் போவதை நாடு பார்க்கத்தான் போகிறது. நாமும் பார்க்கத்தான் போகிறோம்.''

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x