Published : 23 Feb 2018 04:05 PM
Last Updated : 23 Feb 2018 04:05 PM

ஸ்டேரிங் லாக் செய்யாததால் பெண்ணின் வாகனம் திருட்டு: சிசிடிவி பதிவில் சிக்கிய திருடர்கள்

சென்னையில் வங்கிக்கு வந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அது கண்காணிப்பு கேமராவில் பதிவானதை அடுத்து போலீஸார் திருடர்களைத் தேடி வருகின்றனர்.

சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் பானுகுமாரி. இவர் தண்டையார் பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கிக்கு பணத்தை செலுத்துவதற்க்காக நேற்று மதியம் வந்துள்ளார்.

வங்கியின் பார்க்கிங்கில் வாகனத்தை விட்டவர் உடனே திரும்பிவிடப் போகிறோம் என்ற எண்ணத்திலும், பார்க்கிங்கில் இருக்கும்போது பாதுகாப்பாகத்தானே இருக்கும் என்ற அசட்டையில் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டேரிங் லாக் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

வங்கிக்கு உள்ளே சென்று பணத்தை செலுத்திய பின் வெளியே வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பானுகுமாரி புகார் அளித்தார்.

தண்டையார்பேட்டை போலீஸார் உடனடியாக வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர். வாகனம் நிறுத்தும் இடத்தில் கண்காணிப்பு கேமரா இருப்பதைப் பார்த்து அதன் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பானுகுமாரியின் வாகனத்தை திருடர்கள் திருடிச்செல்லும் காட்சி பல கோணங்களில் பதிவாகி இருந்தது.

காவல்துறையினர் வங்கிக்கு வெளியே பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது பானுகுமாரி வாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற பின்னர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்த நபர் அவரது வாகனத்திற்கு அணைபோட்டார்போல் மறைத்துக்கொண்டு நிற்பதும், அவரது கூட்டாளி அங்குமிங்கும் பார்த்தப்படி பானுகுமாரியின் வாகனத்தை சாதாரணமாக சாலையில் தள்ளிசெல்வதும் பதிவாகி இருந்தது.

பிரச்சினை ஏற்பட்டால் தப்பிக்க தயாராக மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த கூட்டாளி பின்னர் வாகனத்தை தள்ளிச்செல்லும் கூட்டாளி பின்னால் செல்வதும் பதிவாகி இருந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் பெட்ரோல் இல்லாத வாகனத்தை நண்பர் உதவியுடன் அவரது மோட்டார் சைக்கிள் மூலம் தள்ளிச் செல்வது போல் தப்பிச்சென்று விட்டனர்.

சி.சி.டி.வி.காட்சிகளை கொண்டு இரு சக்கர வாகன திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். பானுகுமாரி அலட்சியமாக வாகனத்தை பூட்டாமல் (ஸ்டேரிங் லாக்) சென்றதால் அவரது வாகனத்தை திருடிச்சென்றுள்ளனர். முன்பெல்லாம் வாகனத்தை ஸ்டார்ட் செய்து திருடிச்செல்ல முயற்சிப்பார்கள்.

இப்போது அப்படியல்ல இன்னொரு வாகனத்தில் வருகிறார்கள். திருடும் வண்டியில் ஒருவர் அமர்ந்துக்கொள்ள கூட்டாளி அவரது மோட்டார் சைக்கிளில் காலால் தள்ளிக்கொண்டே வாகனத்தை பல கிலோ மீட்டர் தள்ளி எடுத்துச்சென்று பின்னர் மெதுவாக ஸ்டார்ட் செய்து எடுத்துச்செல்கிறார்கள். ஆகவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை லாக் செய்துவிட்டு செல்லவும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x