Published : 23 Feb 2018 09:05 AM
Last Updated : 23 Feb 2018 09:05 AM

ஓபிஎஸ் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல்

தனியார் நிறுவனம் வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனம் முன்பு கடலூர் மாவட்ட விவசாயிகள் கடந்த 3 நாட்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் உட்பட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வரை சந்திப்பதற்காக நேற்று தலைமை செயலகத்துக்கு வந்தனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் காரணமாக அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, தலைமை செயலகம் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை விவசாயிகள் முற்றுகையிட்டு பயிர் காப்பீட்டு தொகை பெற்றுத் தரக் கோரி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x