Published : 23 Feb 2018 07:44 AM
Last Updated : 23 Feb 2018 07:44 AM
கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோயில் கருவறையில் இருந்த வஸ்திரங்கள், பூஜை பொருட்கள், பீரோ ஆகியவை எரிந்து சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சத்திரம்கருப்பூர் மெயின் ரோட்டில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு சொந்தமானது.
நேற்று கார்த்திகை நட்சத்திரம் என்பதால் கோயில் சிவாச்சாரியார் சுந்தரேசன், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகம் செய்தார். பின்னர், கருவறை சன்னதியில் விளக்கேற்றி வைத்துவிட்டு 12 மணியளவில் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கோயிலில் இருந்து திடீரென குபுகுபுவென புகை வெளியேறியது. மேலும், துணிகள் எரிந்து கருகும் வாடை வீசியது. இதையடுத்து கோயிலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் உடனடியாக கோயில் சிவாச்சாரியாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கோயில் கதவைத் திறந்து பார்த்தபோது, கருவறையில் இருந்த பூஜை பொருட்கள், பீரோவில் இருந்த சுவாமி, அம்பாளுக்கு சாத்தப்படும் 50 சேலைகள், 30 வேட்டிகள், எலெக்ட்ரிக் மங்கள வாத்தியம் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்திருந்தன. அர்த்த மண்டபத்தில் இருந்த பூஜை பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்து கோயில் கணக்கர் மஞ்சமுனி கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT