Published : 22 Feb 2018 07:23 AM
Last Updated : 22 Feb 2018 07:23 AM

இறந்தவர் சடலத்துடன் முதியவர்களை அழைத்துச் சென்றதால் சர்ச்சையில் சிக்கிய கருணை இல்லம்: 6 துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

இறந்தவர் சடலத்துடன் இரு முதியவர்களை வேனில் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் உட்பட 6 துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில் மன நோயாளிகள், ஆதரவற்றவர்கள் உட்பட சுமார் 350 பேர் தங்கி உள்ளனர்.

இந்தக் கருணை இல்லத்துக்கு நேற்று முன்தினம் இரவு வேன் ஒன்று வந்தது. இந்த வேன் சாலவாக்கம் அருகே திருமுக்கூடல் பகுதிக்கு வந்தபோது, வேனில் இருந்து மூதாட்டி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் பார்த்தபோது அதில் ஒரு மூதாட்டியும், ஒரு முதியவரும் இருந்தனர். கூடவே ஒரு சடலம் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த வேனை சாலவாக்கம் காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒப்படைத்தனர். போலீஸார் வேன் ஓட்டுநரிடம் விசாரித்தபோது மூதாட்டி திருவள்ளூரைச் சேர்ந்த அன்னம்மாள்(74), முதியவர் இரும்புலியூர் இல்லத்தில் இருந்த செல்வராஜ்(72) என்பது தெரிந்தது.

இவர்களை பாலேஸ்வரம் இல்லத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இரும்புலியூர் கருணை இல்லத்தில் தங்கி இருந்த விஜயகுமார்(75) என்பவர் இறந்ததைத் தொடர்ந்து அவரது சடலத்தையும் இதே வாகனத்தில் எடுத்து வந்துள்ளனர் என்ற விவரங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இறந்தவர்களின் சடலத்தை பாலேஸ்வரம் பகுதியில் உள்ள பிணவறையில் வைத்து அதனை அறையில் சிமென்ட் போட்டு மூடி அடக்கம் செய்யும் வழக்கம் இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காக விஜயகுமார் சடலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. வரும் வழியில் அச்சம் அடைந்த மூதாட்டி அலறியதால், அவர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் ராஜு தலைமையில் வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், சமூகநலத் துறையினர் என 6 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தக் கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது அந்தக் கருணை இல்லம் கடந்த 2017-ம் ஆண்டு வரை முறையான அனுமதி பெற்றே இயங்கியுள்ளது. தற்போது இந்த அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். சமூக நலத்துறையில் கூடுதல் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். இதனால் இது நிலுவையில் உள்ளது என்று ஆய்வில் பங்கேற்ற சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட மேலும் சில அலுவலர்களைக் கேட்டபோது, “இந்தக் கருணை இல்லத்தில் தங்கி இருப்பவர்களில் பலர் விருப்பம் இல்லாமல் தங்கி இருப்பதாகக் கூறினாலும், அவர்களை வெளியே அனுப்பிவிட்டால் எங்கும் செல்ல முடியாதவர்களாக உள்ளனர். அவர்களால் முகவரியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. பலர் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த இல்லத்தில் சில விதிமீறல்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய நிர்ப்பந்திக்கலாம். அதைவிடுத்து இல்லத்தை மூடினால், மன நோயாளிகளை எங்கே விடுவது என்பதில் சிக்கல் ஏற்படும்” என்றனர்.

மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறும்போது, “அந்தக் கருணை இல்லம் அனுமதி பெற்றே இயங்கி வந்துள்ளது. அனுமதி கால அவகாசம் முடிந்துவிட்டதால் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். அந்த இல்லத்தில் சில விதிமீறல்கள் உள்ளன. அவை குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

’தி இந்து’வில் செய்தி

இந்த கருணை இல்லத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சடலத்தை புதைப்பதற்காகப் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு 60 அறைகள் கொண்ட ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது இது தொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. பின்னர் அப்போதை ஆட்சியரின் உத்தரவின்பேரில் அங்கு ஆய்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x