Published : 13 Feb 2018 01:58 PM
Last Updated : 13 Feb 2018 01:58 PM

சென்னையில் கொடூரம்: ஐ.டி. பெண் ஊழியரை தாக்கி வழிப்பறி; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

ஈசிஆர் சாலையில், ஆந்திர மாநில ஐடி பெண் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கி , அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, விலை மதிப்புள்ள ஐ போன் பறிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சென்னையை நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தப் பெண்ணின் பின் பக்க தலையில் அடித்ததில் சாலையின் நடுவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த ராதாவை  சாலையோரம் உள்ள காலி இடத்தில் தூக்கிச் சென்றூ அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயின், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.

தட்டுத்தடுமாறி சாலையோரம் வந்து மயங்கி விழுந்த ராதாவை, மயக்க நிலையில் நள்ளிரவு முதல் காலை வரை சாலையோரத்தில் கிடந்துள்ளார். காலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்துவிட்டு பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீஸார் ராதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையின் சாலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x