Published : 07 Feb 2018 09:46 PM
Last Updated : 07 Feb 2018 09:46 PM
நித்யானந்தா ஆசிரமத்தில் ’அடைக்கப்பட்டுள்ள’ தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என்று போடப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண் சீடர் பெற்றோருடன் சென்றார். ஆண் சீடர் மீண்டும் ஆசிரமத்திற்கே சென்றதால் பெற்றோர் கதறி அழுதனர்.
பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(58). இவரது மகன் மனோஜ் குமார்(24). இவர் மருத்துவம் படித்தவர். மற்றும் இதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது மகள் நிவேதா (19) இருவரும் நித்யானந்த போதனைகளை கேட்கச்சென்றவர்கள் நாளடைவில் நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் சீடராக இணைந்துவிட்டனர்.
தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும், அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட அவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் .முத்து பிரேம்சந்த் தலைமையில் போலீஸார் , கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள நித்யானந்தா சாமியாருக்குச் சொந்தமான பிடபி ஆசிரமத்திற்கு சென்றனர்.
அங்கிருந்து டாக்டர். மனோஜ் குமார், நிவேதா இருவரையும் மீட்டு வந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களிடம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். இதில் நிவேதா தனது உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவர் மட்டும் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின் மனோஜ்குமார் மீண்டும் பிடபி ஆசிரமம் செல்ல விருப்பம் தெரிவித்ததால் உரிய பாதுகாப்புடன் அவர் ஆசிரமத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
தனது பெற்றோருடன் செல்ல ஆண் சீடர் மனோஜ் விரும்பாமல் மீண்டும் ஆசிரம் சென்றதை கண்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேனி மாவட்ட நீதிமன்றம் முன் கதறி அழுதனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT