Published : 04 Feb 2018 10:52 AM
Last Updated : 04 Feb 2018 10:52 AM
காஞ்சி மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந் நிலையில் அவரது ரசிகர் மன்றங்களுக்குத் தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. காஞ்சி மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் நிர்வாகிகளிடம் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் விநி யோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கும் பணி எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது தொடர் பான ஆலோசனைக் கூட்டம் நேற்று கீழம்பியில் உள்ள திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது இன்னும் அதிக உறுப்பினர்களை எவ்வாறு சேர்க்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் பானுமூர்த்தி, மாவட்டப் பொருளர் ரஜினி பாபு உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவு குறித்து ரஜினி பாபு கூறியதாவது:
இதுவரை 1.5 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் வழங்கியுள்ளோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது எங்கள் இலக்கு. வழங்கப்பட்ட விண்ணப்பங்களைப் பயன்படுத்தி 50 சதவீதம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுவிட்டனர். இந்த உறுப்பினர் சேர்க்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை நடத்தியுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT