Published : 03 Feb 2018 08:00 PM
Last Updated : 03 Feb 2018 08:00 PM

திருநங்கைகள் கொடூரம்: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட வாலிபர் பலி, நண்பர் படுகாயம்

கிருஷ்ணகிரி அருகே திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து ஆந்திர இளைஞரை தள்ளிவிட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனிருந்த நண்பருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு திருநங்கைகள் செய்யும் அட்டகாசம் பரிச்சயம். சமூகம் பரிவுடன் பார்க்க வேண்டிய திருநங்கைகளில் ஒரு சில திருநங்கைகள் யாசகம்  என்ற பெயரில் ரயில்களில் செய்யும் அட்டகாசம் அளவிட முடியாதது.

கையை தட்டி உரிமையுடன் பிச்சை கேட்பார்கள். தராவிட்டால் எங்கே அவமானப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தே பலரும் பணத்தை கொடுத்து விடுவார்கள். குறைந்தப்பட்சம் 10 ரூபாய் கொடுத்தால் தான் போவார்கள். கும்பலாக ரயில் பெட்டிகளில் ஏறும் இவர்களை போலீஸாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

இது தமிழகம் முழுதும் அனைத்து ரயில்களிலும் அன்றாடம் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான். ஆனால் அதன் உச்சகட்டமாக கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் இன்று வாலிபர் ஒருவர் திருநங்கைகளால் ஓடும் ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். காப்பாற்றப்போன நண்பருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்திய நாராயணன்(32), இவரும் இவரது நண்பர் காரம் வீரம் பாபுவும் அவர்கள் நண்பர்கள் சிலரும் வேலைத்தேடி திருப்பூருக்கு வந்துள்ளனர். கிருஷ்ணகிரியிலிருந்து ரயிலில் பயணம் செய்துள்ளனர். படிகட்டு ஓரம் தரையில் அமர்ந்து இருவரும் பயணம் செய்துள்ளனர்.

ரயில் ஊத்தங்கரை ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு சாமல்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பணம் கேட்டு ஏறிய திருநங்கைகள் ஒவ்வொருவரிடமும் வசூல் செய்துக்கொண்டு சத்தியநாராயணனிடம் வந்து பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை நானே வேலைத்தேடித்தான் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் பணம் இல்லாதவன் எதுக்குடா ரயிலில் வருகிறாய் என எட்டி உதைத்துள்ளார். இதில் ஓடும் ரயிலிருந்து சத்திய நாராயணன் அலறியபடி கீழே விழுந்துள்ளார். இதில் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

நண்பரை தள்ளிவிட்டதில் பதற்றமடைந்து அவரை காப்பாற்ற ரயிலிருந்து குதித்த நண்பர் காரம் வீரம் பாபுவும் பலத்த காயமடைந்துள்ளார். கீழே விழுந்த காரம் வீரம் பாபு தலையில் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அதிக ரத்த இழப்பு சுயநினைவு இழந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே ரயிலில் இருந்த திருநங்கைகளை பிடிக்க வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு சேலம் அருகே அவர்களை போலீஸார் மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x