Published : 29 Jan 2018 02:42 PM
Last Updated : 29 Jan 2018 02:42 PM
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர், மடாதிபதியாக பொறுப்பு ஏற்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நித்யானந்தா சார்பில், தான் இளைய மடாதிபதியாகத்தான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அதில் இருந்து விலக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு, பொறுப்பில் இருப்பது செல்லாது. அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நித்யானந்தாவுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி சகாதேவன் மதுரை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலானார். இந்த வழக்கு இன்று நீதிபதி சகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை, சிறப்பு வழக்காக எடுத்து இன்று விசாரித்தார்.
நித்யானந்தா சார்பில் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதை கேட்ட நீதிபதி ஈராயிரம் பழமை வாய்ந்த மடத்தின் பெயரை கெடுக்கக் கூடாது. இந்த வழக்கில், பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் . இல்லையேல், அவரை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT