Published : 27 Jan 2018 09:05 AM
Last Updated : 27 Jan 2018 09:05 AM

பெண்ணைக் கொன்று நகை, பணம் கொள்ளை;மின்சாரம் பாய்ச்சி கணவரையும் கொல்ல முயற்சி:

அன்னூர் கணுவாக்கரை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (54), விவசாயி. இவரது மனைவி ராஜாமணி (48). இவர்களுக்கு சுகுணா, ஜனனி என்ற 2 மகள்கள் உள்ளனர். பணி, கல்வி காரணமாக இருவரும் கோவையில் தங்கியுள்ளனர்.

தனது வீட்டருகே புதிய வீடு கட்டி வருகிறார் மயில்சாமி. அங்கு தரை தளத்தில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில், வடமாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மயில்சாமியின் வீட்டுக் கதவைத் தட்டி, குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு வடமாநில இளைஞர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து, கதவைத் திறந்த மயில்சாமி, தண்ணீர் கொண்டுவர வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அவர்கள் ஒரு வயரில் மின்சாரம் செலுத்தி, மயில்சாமியின் உடலில் பாய்ச்சியுள்ளனர். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் மயங்கி விழுந்தார்.

சப்தம் கேட்டு ஓடி வந்த ராஜாமணியை பூரிக் கட்டையால் தாக்கி, புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தூக்கிச் சென்ற அந்த இளைஞர்கள், கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் மயில்சாமியின் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த மயில்சாமி, தனது உறவினருக்குத் தகவல் கொடுத்தார். உறவினர்கள் அங்கு வந்து, மயில்சாமியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் அன்னூர் போலீஸார், ராஜாமணியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கிரானைட் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர்கள் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கி, மயில்சாமியின் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அவர்களை பணிக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x