Published : 23 Jan 2018 09:25 AM
Last Updated : 23 Jan 2018 09:25 AM

அம்மா இருசக்கர வாகன திட்ட விதிமுறையில் திருத்தம்: பழகுநர் உரிமம் இருந்தாலே விண்ணப்பிக்கலாம் - மகளிர் மேம்பாட்டுக் கழகம் நடவடிக்கை

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில், பணிபுரியும் பெண்கள் பயன்பெற, பழகுநர் உரிமம் (LLR) வைத்திருந்தாலே போதும் என்று விதிமுறையைத் திருத்தி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன இத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 5 கடைசித் தேதி

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 125 சிசிக்கு குறைவான வாகனத்தையே வாங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களும் வாங்கலாம்.

பயனாளியின் தனி ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் போக்குவரத்து போலீஸாரின் சோதனைக்கு பயந்தே ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். மாநகரங்களில் உள்ள பெண்களில் கூட, இருசக்கர வாகனங்களை வைத்திருப்போர் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். என்றாவது தேவைப்படும் என்று பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்வது போன்று ஓட்டுநர் உரிமத்தை பெண்கள் வாங்கி வைத்துக்கொள்வதில்லை.

2-ம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போலீஸார் கெடுபிடி இல்லாத நிலையில் அங்கு பெரும்பாலான ஆண்களே ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதில்லை.

கிராமப்புற பெண்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது குறைவே.

கால அவகாசம் இல்லை

மேலும், மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்க ஓட்டுநர் உரிமம் அவசியம் என குறிப்பிடப்படவில்லை. புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 40 நாட்கள் தேவை. வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் இந்த ஆண்டுக்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடையும் நிலையில், புதிய ஓட்டுநர் உரிமம் பெறவும் அவகாசம் இல்லை.

இந்நிலையில் இத்திட்டத்துக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விதிமுறையால் உண்மையான பயனாளிகளால் பயன்பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்திட்டத்தை செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் திருத்தி பழகுநர் உரிமம் வைத்திருந்தாலே விண்ணப்பிக்கலாம் என மாற்றியமைத்துள்ளோம். அதற்கேற்ற வகையில் விண்ணப்பங்களிலும் விவரங்களை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x