Last Updated : 17 Jan, 2018 10:25 AM

 

Published : 17 Jan 2018 10:25 AM
Last Updated : 17 Jan 2018 10:25 AM

சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு பிரம்மபுத்திரா ஆற்று மணலை தமிழகம் கொண்டுவர திட்டம்: பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் அசாம் செல்கின்றனர்

பிரம்மபுத்திரா ஆற்று மணலை தமிழகத்துக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் தலைமையிலான சிறப்புக் குழு விரைவில் அசாம் செல்கிறது.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நீடிக் கிறது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது. இதனால் நிலைமை மேலும் மோசமானது.

இதற்கிடையே, தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்தது. தூத்துக்குடி வந்திறங்கிய இந்த மணல் தரமற்றது என்று கூறி, அதை விற்க தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தேவைக்கேற்ப தரமான மணலை வெளிநாடுகளில் இருந்து இறங்குமதி செய்ய வேண்டும்” என்று அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழகத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மணலைக் கொண்டு வருவது, சேமிப்பது, விற்பனை செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் தேவையை கருத்தில்கொண்டு, வெளி மாநிலங்களில் இருந்து மணலைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அசாமில் இருந்து பிரம்மபுத்திரா ஆற்று மணலை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியாதவது:

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் மணல் இல்லை. இதனால், பிற மாநிலங்களில் குறிப்பாக அசாமில் இருந்து பிரம்மபுத்திரா ஆற்று மணலை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் தலைமையில் ஒரு சிறப்புக் குழு விரைவில் அசாம் செல்கிறது. பிரம்மபுத்திரா ஆற்று மணலின் தரம், அதை எடுத்துவரும் ஏஜென்ஸிகளைத் தேர்வு செய்வது, கடல் வழி, தரைவழி என எந்த மார்க்கத்தில் எடுத்து வருவது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து குழு ஆய்வு செய்து  அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

அரசு அனுமதி கிடைத்ததும் பிரம்மபுத்திரா ஆற்று மணல் தமிழகம் கொண்டு வரப்படும். கடல்வழியாக எடுத்து வருவதென்றால் வட மாவட்டங்களுக்கு தேவை யான மணலை சென்னை துறைமுகத்துக்கும், தென் மாவட்டங்களுக்கு தேவை யான மணலை தூத்துக்குடி துறைமுகத்துக்கும் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில் மூலம் எடுத்து வருவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. அசாம் மாநிலத் தைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்தும் ஆற்று மணல் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

15 மணல் குவாரிகள்

தமிழகத்தில் தற்போது 15 மணல் குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன. இங்கிருந்து தினமும் 2 ஆயிரம் லாரி லோடு மணல் விற்கப்படுகிறது.

ஒரு லாரி லோடு மணலின் அரசு விலை ரூ.1,080. மணல் ஏற்றும் கூலியும் இதில் அடங்கும். கூடுதலாக 15 ஆயிரம் லாரி லோடு மணல் கிடைத்தால் நிலைமையைச் சமாளிக்கலாம் என்கிறது பொதுப்பணித் துறை. ஆனால், தினமும் 55 ஆயிரம் லாரி லோடு மணல் தேவைப் படுவதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x