Published : 15 Jan 2018 03:10 PM
Last Updated : 15 Jan 2018 03:10 PM
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கோமாதா பூஜையுடன், பொதுமக்களுடன் சேர்ந்து மாட்டுப்பொங்கலை கொண்டாடிய ஆளுநர் அனைவருக்கும் தமிழில் வாழ்த்து கூறினார்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை இன்று காலை திடீரென பரபரப்பானது. போலீஸார் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்தார்.
பட்டினப்பாக்கம் கடலில் இறங்கி ஆளுநர் பால் ஊற்றி மலர்களை தூவி தீபாராதனை காட்டி வணங்கினார்.
பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் மைதானத்துக்கு சென்றார். அங்கிருந்த பசுக்களுக்கு கீரைக்கட்டு , பொங்கல் கொடுத்து கோமாதா பூஜை நடத்தினார். அவைகளை தொட்டு வணங்கினார்.
பின்னர் துலுக்கானத்தம்மன் கோவிலுக்குள் சென்று பூஜை செய்து வணங்கினார். ஆளுநர் வந்த போது பக்தர்கள், அங்குள்ள மீனவ கிராம மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொது மக்களை பார்த்த ஆளுநர் அனைவருக்கும் ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று தமிழில் வாழ்த்து கூறினார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்கள்.
ஆண்டு தோறும் பட்டினப்பாக்கம் பகுதியில் கோவிலில் பூஜை நடக்கும். இந்த ஆண்டு ஆளுநர் நேரில் வந்து பூஜை செய்தது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT