Published : 13 Jan 2018 09:08 AM
Last Updated : 13 Jan 2018 09:08 AM

ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்ய அலங்காநல்லூரில் திரண்ட 2 ஆயிரம் மாடுபிடி வீரர்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெயர்களைப் பதிவு செய்ய தமிழகம் முழுவதுமிருந்து 2 ஆயிரம் மாடுபிடி வீரர்கள் நேற்று திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.

உடல் தகுதி பரிசோதனையில் ஏராளமானோர் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டத்தையடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தென்மாவட்டங்களில் களைகட்டியுள்ளது. மதுரையில் அவனியாபுரத்தில் வரும் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளைப் பதிவு செய்யும் பணியும், உடற் தகுதி பரிசோதனை மேற்கொள்ளும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்காக நேற்று முன்தினம் 1,500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பாலமேட்டில் திரண்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். இதில், சிலர் காயமடைந் தனர்.

2 ஆயிரம் பேர் திரண்டனர்

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களின் பெயர்களைப் பதிவு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

பெயர்களைப் பதிவு செய்ய நேற்று அதிகாலையிலேயே தமிழகம் முழுவதுமிருந்து இளைஞர்கள் குவிந்தனர். வாடிவாசல் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் ஒரே சமயத்தில் 500 பேர் வரை மட்டுமே நிற்க முடியும். ஆனால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் முதற்கட்டமாக ஆயிரம் பேரை சமுதாயக் கூடத்தில் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். அப்போது, போலீஸாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தி இளைஞர்களை விரட்டியடித்தனர்.

நிராகரிப்பு சர்ச்சை

அலங்காநல்லூரில் காளைகளை அடக்க குறைந்தது 650 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்திருந்தார். அதனால், பெயர் பதிவு செய்த அதிகாரிகள், வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஏராளமானோரை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த முறை 8 காளைகளை அடக்கிய வீரரைக்கூட உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லை என்று கூறி நிராகரித்தனர். இதனால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

உடல் தகுதி சோதனையில் நிராகரிக்கப்பட்ட மாடுபிடி வீரர் மகாராஜன்(32) கூறியதாவது: 12 ஆண்டுகளாக பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கி உள்ளேன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 மாடுகளை அடக்கினேன். ஆனால், நான் 50 கிலோ எடைதான் இருப்பதாகக் கூறி என்னை அலங்காநல்லூரில் நிராகரித்துவிட்டனர். அதேசமயம், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க என்னை அனுமதித்து பெயரை பதிவு செய்துள்ளனர். அப்படியென்றால் அலங்காநல்லூரில் ஒரு விதிமுறை, பாலமேட்டில் மற்றொரு விதிமுறையா? போலீஸாருக்கும், ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்குகின்றனர் என்று ஆதங்கப் பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x