Published : 12 Jan 2018 07:51 PM
Last Updated : 12 Jan 2018 07:51 PM

அன்று அதிமுகவே இல்லாத நிலையில் முடிவெடுத்ததை எப்படி தவறென்று கூறமுடியும்: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இறுதி வாதம்

தகுதிநீக்கத்தை எதிர்த்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டுமுடித்த சென்னை உயர் நீதிமன்றம், எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முதல்வர் பழனிசாமியை மாற்றக்கோரி டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து மனுகொடுத்தனர். இவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில் எஸ்.டி.கே ஜக்கையன் சபாநாயகரை சந்தித்தார், எடப்பாடி அணியில் இணைந்தார். மீதமுள்ள கடிதம் கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். சட்டப்பேரவை தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டிடிவி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தரப்பில் வாதத்தில் கூறியதாவது:

செங்கோட்டையனை முதல்வராக்க நாங்கள் விரும்பியதாக ஆங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தியை தான் சுட்டிக்காட்டினேன். அதிமுக-வையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததை சுட்டிக்காட்டி பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும்போது, அதே நடைமுறை தான் எங்களுக்கும் பொருந்தும்.

ஆணையம் தீர்ப்பளிக்கும் 2017-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வரை அதிமுக என்ற கட்சியே இல்லை. கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை போலதான் நாங்களும் மனு கொடுத்தோம். இதுகட்சி தாவல் இல்லை. எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படவில்லை. என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x