Published : 08 Jan 2018 01:49 PM
Last Updated : 08 Jan 2018 01:49 PM

ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா: ஸ்டாலின் பேட்டி

ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா மாதிரி அமைந்துள்ளது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதிலும் வெளிநடப்புச் செய்தார் மு.க.ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

''ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா மாதிரி அமைந்துள்ளது. உரையில் வருவாய் குறைந்துள்ளதை ஒத்துக்கொண்டுள்ளனர். வருவாய் குறைந்துள்ள நிலையில் அறிவித்துள்ள திட்டங்களை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பது கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் உள்ளது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். திட்டங்களை நிறைவேற்ற நிதியை எப்படி கொண்டு வரப்போகிறார்கள். எதாவது மந்திரக்கோல் வைத்துள்ளார்களா? தெரியவில்லை.

ஆளுநர் உரையில் கடன் சுமை பற்றி ஒரு வரியும் குறிப்பிடப்படவில்லை. தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை எப்படி சரி செய்யப் போகிறோம் அந்த விளக்கமும் இல்லை. வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் எப்படி ஈடுபடப் போகிறோம் என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக விவசாயிகள் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகள் எப்படி நிறைவேற்ற இந்த அரசு முன் வர இருக்கிறது என்பது பற்றியும் சொல்லவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது. ஆளுநர் உரையின் தொடக்கத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிக்கு ஒரு பெரிய பாராட்டு பத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆளுநர் உரை என்பது, மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத்தான் படிப்பார்கள், அதுதான் மரபு. எனக்கு மத்திய அரசு தயாரித்து கொடுக்கும் உரையைத்தான் ஆளுநர் உரையில் படிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் வந்துள்ளது. ஆகவே நான் முன்பே சொன்னது போல் ஆளுநர் உரை மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது.

அலுவல் ஆய்வுக்குழுவில் முதல்வர் பதிலுக்கு முன்பு சட்டமன்ற மரபுப்படி எதிர்க்கட்சித்தலைவர் பேசிய பின்புதான் முதல்வர் பேச வேண்டும் என்று உள்ளது. இடையில் சூழ்நிலை காரணமாக அது மாறியது அதையே தொடர வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

நாங்கள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பேசிய பின்னர் முதல்வர் பேச வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதை அலுவல் ஆய்வுக்குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஏன் அலுவல் ஆய்வுக்குழுவை கூட்டவேண்டும், நீங்களே கூடி அறிவித்திருக்கலாமே என்று வெளிநடப்பு செய்தோம்.''

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x