Published : 05 Jan 2018 10:07 AM
Last Updated : 05 Jan 2018 10:07 AM

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளைக் கைப்பற்றி 13 மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். இதில், நேற்று அதிகாலை அருளானந்தம் மற்றும் கென்னடி ஆகியோருக்குச் சொந்தமான 2 படகுகளில் சேசு, மணி, மலைச்சாமி, மூக்கன், மூக்கையா, மில்டன், எமர்சன், சேகர், வில்பர்ட் மோசஸ், ஜஸ்டின், ஜான் போஸ், நேதல், வினோ ஆகிய 13 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், இது இலங்கை கடற்பகுதி இங்கு மீன்பிடிக்கக் கூடாது எனக் கூறி, 13 மீனவர்களையும் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். பின்னர், யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 13 பேரையும் ஒப்படைத்தனர்.

ஜன.18 வரை நீதிமன்ற காவல்

அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி ரியால், அவர்களை ஜன.18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கடந்த 5 நாட்களில் அடுத்தடுத்த சிறைபிடிப்புகள் மூலம் மொத்தம் 26 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் சேர்த்து, யாழ்ப்பாணம் சிறையில் மட்டும் 97 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x