Published : 01 Jan 2018 08:45 PM
Last Updated : 01 Jan 2018 08:45 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக பெய்யும் அளவை விட கடந்த ஆண்டு 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 19 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 2017-ம் ஆண்டில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 44 செமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, நாகை ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் அதிகமாக (66 செமீ) மழை பதிவாகியுள்ளது.
11 மாவட்டங்களில் 20 முதல் 40 சதவீதம் வரை மழை குறைவாகவும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதம் வரை இயல்பை விட குறைவாகவும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 49 சதவீதம் மழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 94 செமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 19 சதவீதம் அதிகம்.
கடந்த ஓராண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 97 செமீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 6 சதவீதம் அதிகம். தென்மேற்கு பருவமழை இயல்பை விட 29 சதவீதம் அதிகமாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9 சதவீதம் குறைவாகவும் பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த ஓராண்டில் 139 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம்.
மத்திய வங்கக் கடல் மற்றும் வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் மேகக் கூட்டங்கள் இருக்கும் காரணத்தால் அடுத்த 5 நாட்களுக்கு பிறகு வடகிழக்கு பருவக் காற்று விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்று பாலசந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT