Published : 01 Jan 2018 10:25 AM
Last Updated : 01 Jan 2018 10:25 AM

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 69 பேர் ஊர் திரும்பினர்: ராமேசுவரம் மீனவர்கள் 13 பேர் கைது

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 69 பேர் நேற்று காரைக்கால் வந்து சேர்ந்தனர்.

கடந்த ஆகஸ்ட் முதல் 4 மாதங்களில் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு சம்பவங்களின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 160 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்திருந்தனர். இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 27-ம் தேதி சொந்த ஊர் திரும்பினர்.

மேலும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்த 52 மீனவர்கள், வவுனியா சிறையிலிருந்த 17 மீனவர்கள் டிச.29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், காரைக்கால் மாவட்டத் தைச் சேர்ந்த 9 மீனவர்கள் ஆவர்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 69 பேரையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் நேற்று காலை இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கள் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு நேற்று பிற்பகலில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

13 பேர் கைது

இதனிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

ராமேசுவரத்தில் இருந்து ஜெயசீலன், அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சீமோன், டோனா, திவாகர், இருதயம், கிறிஸ்துராஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடிப்பதாகக் கூறி படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர். அவர்களை ஜனவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x