Published : 29 Dec 2017 10:07 AM
Last Updated : 29 Dec 2017 10:07 AM

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை: வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பை விட 9 % குறைவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமாக அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 27-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 399 மிமீ மழை பெய்துள்ளது. இது, முந்தைய ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்த இயல்பான மழை அளவை விட 9 சதவீதம் குறைவு. புதுச்சேரியில் 980 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம்.

மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 48 சதவீதமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 சதவீதமும் இயல்பைவிட குறைவாக மழை பெய்துள்ளது. அவற்றுக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 44 சதவீதமும், திருச்சி மாவட்டத்தில் 43 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 665 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகமாகும். சென்னையில் 20 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

இருப்பினும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பவில்லை. அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை வலுப்பெறாமல், வலுவிழந்து வருகின்றன. இன்னும் சில தினங்கள் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வறண்ட வானிலை நிலவுகிறது. அடுத்த 5 நாட்களுக்கும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, தொடர்ந்து வறண்ட வானிலை தான் நிலவுகிறது. அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x