Published : 27 Dec 2017 02:19 PM
Last Updated : 27 Dec 2017 02:19 PM
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நிறைய விஷயங்கள் பேச வேண்டிய நேரங்கள் வரும், பேசவேண்டிய விஷயங்களும் உள்ளன என்று கூறினார்.
அரசியலுக்கு வருவதன் முன்னோட்டமாக கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம், சிஸ்டம் சரியில்லை என்று பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டாம் கட்டமாக, ரஜினிகாந்த், தன் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி, நேற்று முதல் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. வருகிற 31-ம் தேதி வரை, ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி. நேற்று 31-ம் தேதி முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
நேற்றைய முதல் நாள் விழாவில், தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் முதலானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இரண்டாம் நாளான இன்று ரஜினி ரசிகர்களிடம் பேசியதாவது:
''மகிழ்ச்சியான ஒரு விழா, மறுபடியும் நண்பர் மகேந்திரன், கலைஞானத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப கட்டுப்பாட்டுடன் இருந்தீர்கள் ரொம்ப சந்தோஷம். ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பாருங்கள், படியுங்கள், அழிவுப்பூர்வமான விஷயங்களை பார்க்காதீர்கள்.
தாய் தந்தையை மதியுங்கள், அவர்கள் தான் வாழும் தெய்வங்கள், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். அவர்கள் தான் நமது ஆஸ்தி, சொத்துகள். உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறைய விஷயங்கள் பேச வேண்டிய நேரங்கள் வரும், பேசவேண்டிய விஷயங்களும் உள்ளன.
இவ்வாறு பேசினார்.
அதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ம் தேதி அறிவிக்கிறேன். இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கிறது பொறுமையாக இருங்கள்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT