Published : 24 Dec 2017 12:09 PM
Last Updated : 24 Dec 2017 12:09 PM

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை: 4-வது சுற்று முடிவில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற பாஜக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4-வது சுற்று முடிவில் நோட்டாவை விட பாஜக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 220 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் நோட்டாவுக்கு 325 வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி பார்த்தால் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

முதல் சுற்றில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 5,339 வாக்குகள் பெற்றார். தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது சுற்றுகளில் முன்னிலை வகித்த தினகரன் இதில் 4-வது சுற்று முடிவில் 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

4-வது சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9,672 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 5,091 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 737 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 220 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் நோட்டாவுக்கு 325 வாக்குகள் கிடைத்துள்ளன.

பாஜக வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

நோட்டா என்பது என்ன?

தேர்தலில் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் அதை தெரிவிப்பதற்காக வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா (None Of The Above) என்ற பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. நோட்டா என்பதை முன்னர் 49 ஓ என சுருக்கமாக குறிப்பிட்டு வந்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நோட்டா என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x