Published : 19 Dec 2017 09:53 PM
Last Updated : 19 Dec 2017 09:53 PM

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கு தகுந்த பாடம் புகட்டவே ஆர்.கே.நகர் தேர்தல்: நிறைவு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஸ்டாலின் நேதாஜி சிலை அருகிலும், கலைஞர் நகர் 3-வது தெருவிலும், நிறைவுரையாக வைத்தியநாதன் தெருவிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இன்றைக்கு ஆர்.கே.நகர் மக்களை விலைபேசி 6,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு துணையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் பட்டியல் எங்களுக்கு வந்துவிட்டது. செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது. தேர்தல் முடிந்து, அடுத்த 3 மாதங்களில் சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வந்து, திமுக ஆட்சி அமர்ந்ததும், அவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரையும் சொல்லவில்லை, தீய சக்திகளாக சிலர் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். தலைவர் கருணாநிதி பெருந்தன்மையோடு அவர்களை மன்னிப்பார். ஆனால், தவறு செய்தவர்களை நாங்கள் நிச்சயமாக விடமாட்டோம். எனவே, உரிய தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள்.

இதைச் சொல்வதற்குக் காரணம், தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் உள்ளது. எனவே, இனியாவது திருந்த வேண்டும். செய்த பாவத்துக்கு பரிகாரம் காண வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளின்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதைத்தான் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நான் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடந்த 22 நாட்களாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இன்றைய தினம் பிரதமர் நேரில் வந்து ஆறுதல் சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது. பிரதமர் வருகிறார் என்றதும் இங்கிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பறந்து போயிருக்கிறார். ஆனால், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோது 15 நாட்கள் அங்கு சென்று பார்க்கவில்லை. அங்கு சென்றது கூட பரவாயில்லை, பிரதமர் வந்தால் முதல்வர் போக வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், புயல் பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்கள் கடந்து சென்றபோது, அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் சென்று அமர்ந்து, கூட்டம் நடத்திவிட்டு, அறிவிப்பை வெளியிட்டு விட்டு வந்து விட்டார்.

அங்கிருக்கும் தாய்மார்கள், மீனவர்கள் இறந்தபோது வரவில்லை, ஆனால் காரியத்துக்கு வந்திருக்கிறார், என்று தெரிவித்தார்கள். ஆகவே, இங்கிருக்கும் மீனவ சமுதாய சகோதர, சகோதரிகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்கு துரோகம் செய்த இந்த அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

நீங்க தேர்ந்தெடுத்த ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவி வரும் மர்மம் குறித்து உங்களுக்கே நன்றாக தெரியும். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள், இந்த தொகுதிக்கு என்னென்ன துரோகங்கள் செய்வார்கள் என்பதும் உங்களுக்கே நன்றாக தெரியும். ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ், 2-வது குற்றவாளி ஈபிஎஸ், 3-வது குற்றவாளி சசிகலா. இவர்கள் மூவருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதற்கான வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x